×

செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று விசாரணை: ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இறுதி முடிவுக்காக இந்த வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நியமித்தார். அவர் இன்று வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண மோசடி சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கைது செய்ததில் சட்ட விதி மீறல் நடந்ததுள்ளது. அதனால் அவரை கைது செய்தது சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரி அவரது மனைவி மேகலா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரின் நீண்ட வாதங்களுக்கு பின்னர் இரு நீதிபதிகளும் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தனர். நீதிபதி நிஷா பானு அளித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்றும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியை கைது செய்ததில் சட்ட விதிமீறல் இல்லை. அவர் உடல் நிலை குணமானவுடன் அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இறுதி முடிவை எடுக்க இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்ற இந்த தீர்ப்புகள் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமனம் செய்து தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று மதியம் 2.15 மணியளவில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

The post செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று விசாரணை: ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CV ,Karthikeyan ,Senthil Balaji ,Chief Justice ,Gangaburwala ,Chennai ,Minister ,IC Court ,Gangapurwala ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...